மழையினாலும், குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்காக கோவை மாநகரில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய கோவை மாநகராட்சி சமீபத்தில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

கோவை மாநகரின் பல இடங்களில் சாலைகள் மோசமாக இருப்பது மழை காலங்களில் பேசுபொருளாகும். வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் துயரம் இந்நாட்களில் தான் அதிகம் கவனம் பெறும். கோவையில் உள்ள சாலைகள் பிரச்சனை பற்றி அதிமுக தலைவர்களில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசினார், அதை தொடர்ந்து கோவை கலெக்டரிடம் மனு ஒன்றையும் வழங்கி சாலை பிரச்சனையில் இருந்து மக்களுக்கு தீர்வளிக்க வேண்டும் என்றார். இதற்கு பின்னர் கோவையின் பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.

இதை தொடர்ந்து சென்றமாதம் 30ம் தேதி கோவை மாநகரில் மழை, குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை போன்ற எந்த ஒரு காரணத்தாலும் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணிக்கு எடுத்து கொல்லப்பட்டு அங்கு பணிகள் விரைவில் துவங்கும் என கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். தொடர்ந்து மாநகரில் 2500க்கும் அதிகமான சாலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பணி ஆணைகளும் மாநகராட்சியால் வழங்கப்பட்டது. இதற்கடுத்து பல இடங்களில் சாலை பணிகள் நடைபெற துவங்கியுள்ளது. இதை ஆணையர் கவனித்து வருகிறார். 

இன்று, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் சாலைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடக்கு மண்டலம், வார்டு எண்.1-க்குட்பட்ட துடியலூர், ஸ்ரீகாந்த் நகர், சாரளா கார்டன், வளர்மதி நகர் உள்ளிட்ட 10 இடங்களுக்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகள் குறித்தும் மற்றும் வார்டு எண்.10-க்குட்பட்ட சரவணம்பட்டி, போஸ் கார்டன் பகுதியில் புதிதாக தார் சாலை அமையவுள்ள இடத்தினையும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

2026 தேர்தலுக்குள் கோவை மக்கள் சந்திக்கும் பொது பிரச்சனைகளுக்கு அரசு நடவடிக்கைகள் மூலம் விடியல் கிடைத்தால், கோடி ஆனந்தமே...