கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் 2027 இறுதியில் தானா? ...
- by CC Web Desk
- May 23,2025
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம்/சேப்பாக் கிரிக்கெட் மைதானத்தை அடுத்து கோவையில் தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான முயற்சிகளை முழுவீச்சுடன் எடுத்துவருகிறது.
இந்த மைதானம் கோவை விமான நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில், ஒண்டிப்புதூர் பகுதியில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் அமைகிறது. மாநிலத்தின் துணை முதலமைச்சரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தின் மேல் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது வெளிவந்துள்ள தகவல் படி இந்த மைதானத்தை ரூ.500 கோடி மதிப்பில், ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் ஸ்டேடியம் போல வடிவமைத்திடவும், ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 30,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரவு, பகல் நேரங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த உகந்த மைதானமாக இதை உருவாக்கவும், அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை தவிர இசை கச்சேரிகள் போன்ற நிகழ்வுகளை நடத்தவும் உகந்ததாக இதை உருவாக்க திட்டங்கள் உள்ளன. இந்த மைதான திட்டத்திற்கான முக்கியமான வடிவமைப்பு தொடர்பான மற்றும் மைதானத்தின் பயன்பாடு தொடர்பான முக்கியமான திட்டங்கள் இறுதியாகி உள்ளது.
மழை காலங்களில் இந்த மைதானத்தில் மழைநீர் மிகவிரைவில் வெளியேற தேவையான கட்டமைப்புகள் இடம்பெறும் எனவும், மழை நின்றதில் இருந்து 20 நிமிடங்களில் ஆடுகளத்தின் அவுட்-பீல்ட் பகுதியில் நீர் வடிந்திடும் படி வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரியவருகிறது. இந்த திட்டத்துக்கான வரைபடம் முதலமைச்சரின் ஒப்புதலை பெற்றதும் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகும். 2027ம் ஆண்டு இறுதியில் இந்த மைதானம் கட்டிமுடிக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.