கோவை கிரைம் செய்திகள் - 2.6.2025
- by CC Web Desk
- Jun 02,2025
மதுபோதையில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் ஒருவர் மரணம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் அழகப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (55). சமையல் வேலை செய்து வருகிறார்.கடந்த 29ஆம் தேதி இரவு கோவை சாலை சக்தி ஹோட்டல் அருகே மதுபோதையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பொள்ளாச்சியை சேர்ந்த செல்வகுமார், சமையல் கலைஞர் (48) மற்றும் அவரின் நண்பர்கள் சிலரிடம் இவருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதில் மணிகண்டனை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை தாக்கிய செல்வகுமார் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.இதனையடுத்து செல்வகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி கொலை சம்பவத்தில் போலீசில் சரணடைந்த மாணவன்!
பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கண்ணன். இவரது 19 வயது மகள் அஸ்விதா. கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் BSC IT இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவரது தந்தை கண்ணன் தாயார் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் அவரது தந்தை கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மாணவி கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஏற்கனவே மாணவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தததையடுத்து அங்கு பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது உடுமலை சாலையில் உள்ள அண்ணாமலையார் நகரை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரவீன் குமார் என்ற வாலிபர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
அஸ்விதா, பிரவீன் குமார் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஸ்விதா பிரவீன் குமாரை திருமணம்செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் அஸ்விதா தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்று சராசரியாக மாணவியை குத்தி கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சம்பவ இடத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.