காதலனுடன் பேச அனுமதி மறுப்பு... குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் செயல்

தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், இவரது மனைவி காளியம்மாள். கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் மாலதி (வயது 18). கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள கல்லூரியில் புகைப்படத் துறையில் ஆறு மாத டிப்ளமோ படிப்பு படித்து வந்தார்.

அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவருடன் தனது மகள் பழகி காதலித்து, வருவதாக தாய் காளியம்மாளுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து கல்லூரிக்கு தனது மகள் மாலதி செல்வதை தாய் காளியம்மாள் நிறுத்தியுள்ளார். மாலதியின் செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார். இதன் பின்னர் அவரை வேலைக்கு அனுப்பியுள்ளார் காளியம்மாள்.

இந்த நிலையில், அந்த ஆண் நண்பருடன் தான் கைபேசியில் பேச வேண்டும் என மாலதி தனது தாய் காளியம்மாளிடம் கேட்ட போது அவர் செல்போனை தர முடியாது என மறுத்ததால் வேதனை அடைந்த மாலதி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் நைலான் கயிறால் தூக்கிட்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காளியம்மாளின் அண்ணன்கள் மூர்த்தி, விக்னேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாலதியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதை குறித்து காளியம்மாள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் வாங்கி தராததால் கோவையில்  பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு!

கோவை தொண்டாமுத்தூர் உலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவர் எல்.ஐ.சி முகவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா, மகன் ராகுல் (வயது 15). தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார்  பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடன் படிக்கும் நண்பர்கள் சிலர் செல்போன் வைத்து இருந்ததால் தனக்கும் செல்போன் வேண்டும் என வீட்டில் அடம் பிடித்து கேட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் வாங்கித் தர மறுத்ததால்,  நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி அவரது தாயின் புடவையால் வீட்டில் காலில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

இதனைக் கண்ட அவரது தாய் சுஜாதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகன் ராகுலை மீட்டு பார்த்தபோது உடல் சூடாக இருந்ததால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராகுலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து ராகுலின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைத்து உள்ளனர். இதுகுறித்து ராகுலின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பணியாளர்களிடம் வழிப்பறி செய்த நபர்கள் சிக்கினர்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருபவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரகுமான் (வயது 20), பாபி (வயது 24) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நுன்னுல்லா முர்மு (வயது 24).

இவர்கள் அன்னூர் அருகே கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியில் தனியார் உணவகம் அருகே  நடந்து வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி இவர்கள் வைத்திருந்த 3 செல்போன் மற்றும் ரூ.16,000  ரொக்க பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

பின்னர் தொழிலாளர்கள் மூவரும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் அவர்களை பின் தொடர்ந்து வந்து மீண்டும் இவர்களிடம் மீதம் ஏதாவது பணம் உள்ளதா என மீண்டும் வழிப்பறி செய்ய தேடி உள்ளனர்.

ஆனால் அவர்களிடமிருந்து தொழிலாளர்கள் தப்பிய நிலையில் அந்த சாலையில் வந்த தனியார் பேருந்தில் அவர்கள் ஏறி இருக்கலாம் என எண்ணி, அந்த பேருந்தை வழிமறித்து பேருந்து நடத்துனரிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளே சோதனை செய்ய வேண்டும் என ரகளை செய்துள்ளனர்.ஆனால் பேருந்து நடத்துனர் அதை அனுமதிக்கவில்லை.

அதன்பின் குடிபோதையில் இருந்த மூவரும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மூலம் பேருந்தை பின் தொடர்ந்து அன்னூர் பேருந்து நிலையம் வந்துள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி இவர்கள் வழிப்பறி செய்த அந்த 3 வடமாநில தொழிலாளர்களை தேடியுள்ளனர்.

இதில் பேருந்து நடத்துனருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மூவரும் கத்தியை காட்டி நடத்துனரை மட்டுமல்லாமல் சக பயணிகளையும் மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று திரண்டி இவர்கள் மூவரையும் தாக்க முயன்றதால் மூவரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

இதையடுத்து பேருந்து நடந்துநரும்,  செல்போனை பறிகொடுத்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் அன்னூர்  போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் எல்லப்பாளையம் பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது அப்பகுதியில் சந்தேககத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர்‌.

அப்போது கோவை அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் வசிக்கும் சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு மகன் அஜித் வீரன் (வயது 26),  தேனி மாவட்டம் தேவனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் மாரி என்கிற மாரிமுத்து (வயது 29) மற்றும் காசி என்கின்ற வெள்ளை பாண்டி (வயது 24)  ஆகிய 3 பேர் தான் வட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும், பேருந்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர்.

இதை அடுத்து இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து இவர்களிடம் இருந்து மூன்று கத்தி மூன்று செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்கள் மூவரையும் அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.