கோவை பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது.  வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அவர் கூறியது:-

கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது.  கோவை பாராளுமன்ற தொகுதியில் 21,06,124 வாக்காளர்களும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 15,93,168 வாக்காளர்களும் உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 3096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பணிபுரியும் அலுவலர்கள் நாளை பிற்பகல் முதலே அங்கு பணிக்கு செல்வர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு காலநிலையை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, சாமியான பந்தல் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் வாக்களிக்க வரும் சமயத்தில், அவர்களுக்கு சக்கர  நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மலை பகுதி மற்றும் கேரள மாநில எல்லையை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, இம்முறை பேருந்து மற்றும் ஜீப் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதது.

கோவை, கேரள மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது வாக்குச்சாவடிகளும்,துணை ராணுவ படை மற்றும் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் வாக்குப்பதிவு நடைபெறும்.

யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டு விலங்குகள் வராதபடி வனத் துறையிடம் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிய இங்கே கிளிக் செய்யவும்! .