நியாயமான சம்பளம் வழங்கும் வரை பணி புறக்கணிப்பு போராட்டம் இன்று முதல் நடைபெறும் - கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு
- by David
- Jun 09,2025
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்காமல் குறைவான ஊதியமே வழங்கப்படுவதாக தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 500+ பேர் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி ஒப்பந்த ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது:-
27.10.2023 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாக ஆணையர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற நகராட்சி மாநகராட்சி ஊராட்சி பேரூராட்சி ஆகிய பகுதியில் இருக்கக்கூடிய துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசாணை 62 இன் படி குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் இந்த அரசாணையை மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காமல் இன்று வரை தொழிலாளிகளுக்கு அவர்களுக்கான நியாயமான சம்பளத்தை வழங்காமல் இருக்கிறது.
அரசனை அறிவித்த போது மாதம் ரூ.21,721 சம்பளமாக வழங்கி இருக்கப்பட வேண்டும். அதுவே தற்போது ரூ.24,000+ சம்பளம் வர வேண்டியது உள்ளது. ஆனால் இவர்கள் வழங்குவது ரூ. 14,640 ரூபாய். நாள் ஒன்றுக்கு ரூ.441 மட்டுமே சம்பளமாக ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கிடைக்கிறது.
எங்களிடம் இ.எஸ்.ஐ மற்றும் பி.எப். தொகை பிடிக்கின்றனர். எங்களிடம் ஒரு தொகையும், முதலாளி தரப்பில் இ.எஸ்.ஐ மற்றும் பி.எப். தொகையும் போடவேண்டும். ஆனால் இரண்டையும் எங்களிடமே பிடித்தம் செய்கின்றனர். இதுவும் தொடர்கிறது என அவர்கள் குற்றம் சாட்டினர்.
எங்கள் கோரிக்கை, அரசாணை 62ன் படி குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே. அவ்வாறு வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இன்றைய தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடக்கிறது. இது சம்பளம் வழங்க வேண்டி பணி புறக்கணிப்பு போராட்டமாக நடைபெறுகிறது என்றனர்.
இவ்வாறு ஒப்பந்த ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.