5000த்தை கடந்த கொரோனா தொற்று... கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதார துறை அறிவுறுத்தல் ... இதையெல்லாம் செய்வது மிகவும் நல்லது - மருத்துவர்
- by David
- Jun 06,2025
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5300க்கும் மேல் உள்ளது. கேரளாவில் 1480க்கும் மேலே பாதிப்புகள் பதிவாகி உள்ளது. கேரளா தவிர கர்நாடக, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தலைதூக்குகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காணப்படுவதால் தமிழகத்தில் கர்ப்பிணிகள் மாஸ்க் அணியவேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை இன்று அறிவுறுத்தி உள்ளது. அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி கோவையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஆதித்யன் குகனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது :-
இன்று உள்ள சூழலை கருத்தில் கொண்டு பொது இடங்களுக்கு மக்கள் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது மிகவும் நல்லது. தற்போது கொரோனா உள்பட எந்தவகை வைரஸ்களாக இருந்தாலும் அதன் தாக்கம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு லேசானதாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் ஒருவரின் எதிர்ப்பு சக்தி, மற்றும் உடல் நிலை எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் கொரோனா போன்ற வைரஸ் பரவலின் போது அவரவரின் நிலை இருக்கும்.
எனவே பொது இடங்களுக்கு செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தேவைப்படும் போது சமூக இடைவெளியை கடைபிடித்தால், மக்கள் அதிகமிருக்கும் இடத்துக்கு சென்று வந்தால், வெந்நீரில் குளித்தல், ஆவி பிடித்தல் போன்ற வழிமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்றினால் இந்த பரவலை எளிதில் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
எதனால் இப்போது மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கிறது என அவரிடம் கேட்டதற்கு, அவர் கூறியது :-
கொரோனா உள்ளிட்ட வைரஸ்கள் மாறுபாடு (mutation) அடைந்துகொண்டே இருக்கும். இப்போது உள்ள கொரோனா வைரஸ் அவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளது. வைரஸ் மாறுபாடு அடையும்போது அதன் வீரியம் மாறும். அது அதிகரிக்கவும் செய்யும், ஆற்றல் இழக்கவும் செய்யும். இது ஒரு காரணம். சில நேரத்தில் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதாலும் வைரஸ் பரவலுக்கு உகந்த சூழல் ஏற்படும். நாட்டின் பல இடங்களில் மழை, வெயில் மாறிமாறி ஏற்பட்டுள்ளது. இதுவும் ஒரு காரணம்.
கர்ப்பமாக உள்ள பெண்கள் அவசியம் முகக்கவசம் அணிந்து கொள்ளவேண்டுமா என கேட்டதற்கு, அவர் கூறியது :-
ஒரு உடலில் இரண்டு உயிர் வாழும் போது, அந்த நேரத்தில் பெண்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். எனவே கர்பமாக உள்ள பெண்கள், அறுவை சிகிச்சை, கீமோதெரப்பி சிகிச்சை முடித்தவர்கள் எல்லோருமே இதுபோன்ற காலங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். மக்கள் அனைவருமே முடிந்தவரை ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
PC: The Hindu