கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள 49.5 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணை கோவையில் உள்ள 100 வார்டுகளில் 22 வார்டுகளுக்கும், இதை தவிர 28 கிராமங்களுக்கும் 7 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

இந்த அணையில் ஏற்படும் நீர் கசிவால் தினமும் பெருமளவில் நீர் அணையிலிருந்து வீணாவதாக தமிழக குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் கோவை மாநகராட்சிக்கு கடிதம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இதை சரி செய்வது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு பணியில், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர் குழு, சென்னை IIT குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குழுவினர், கோயம்புத்தூர் மாநகராட்சி குழுவினர் மற்றும் கேரள நீர்வளத்துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிறுவாணி அணையின் நீர் கசிவு ஏற்படுவதை சரி செய்வது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்வது தொடர்பாக  இன்று கோவை மாநகராட்சி சார்பில் கேரளம் மாநில நீர்வளத்துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

கேரளா நீர் வளத்துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆகியோருடன் இணைந்து அணையை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, சிறுவாணி அணைக்கான நீர் வரத்து, மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அவர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான தண்ணீர் செல்லும் நீர் திறப்பு பகுதி மற்றும் தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதை பகுதியினையும்ஆய்வு மேற்கொண்டார்.

சிறுவாணி அணை பகுதியில் புதிதாக வர்ணம் பூசுதல் மற்றும் அணையில் படர்ந்துள்ள செடிகள், மரங்கள் அகற்றும் பணிகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு புனரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு இன்று நடைபெற்ற ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.