"மே 1ம் தேதி அரசு விடுமுறை விடப்படுகிறதே ஏன்?" என உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் அது ஏன் என நீங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

1800-களில் தொழில் புரட்சி நடந்துகொண்டு இருந்த காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நகரங்களில் ரயில் தடம் அமைத்தல், ரயில் பாதை விரிவாக்கம், உடை உற்பத்தி, இரும்பால் ஆன இயந்திரங்களை உற்பத்தி செய்தல், சாலைகள் விரிவாக்கம் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தொழிற்சாலைகளில் பணிகள் கடுமையாக இருந்தன. அதிக நேரம் உழைத்தாலும் ஊதியம் என்பது குறைவாகவே இருந்தது. உரிமைகள் என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணமுடியாத ஒன்றாக இருந்தது. 

இதனால் உழைப்பாளர்கள் ஒன்றுகூடி சில போராட்டங்களை அமெரிக்க, ஐரோப்பா நகரங்களில் நடத்தினர். மே 1886ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் சில உயிரிழப்புகளும் அசம்பாவிதங்களும் நடந்தன. 

உயிரிழந்த போராளிகளை நினைவில் கொள்ளவும், உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கவும், உழைப்பாளர்களின் நலன்களுக்காக செயல்பட்ட  ஐரோப்ப, அமெரிக்க அமைப்புகள் மே 1, 1890ல் முதல் முறையாக உழைப்பாளர் தினம்/மே தினத்தை கொண்டாடினர். தொடர்ச்சியாக உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளை கேட்டு போராடி வந்தனர். 

அதற்கு பின்னர் அமெரிக்காவில் 1914 ஆண்டு முதல், சில சட்டங்கள் (Clayton Antitrust Act of 1914, Norris-LaGuardia Act of 1932, The Wagner Act of 1935) போராடும் உழைப்பாளர்களுக்கும், தொழில் சங்கங்களுக்கும் பாதுகாப்பையும், அங்கீகாரத்தையும் வழங்கியது. 1938ல் Fair Labor Standards Act எனும் சட்டம் தான் அங்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம், வாரத்திற்கு 40 மணி நேரம் வேலைக்கலாம் என்பதை அங்கு உறுதி செய்ய உதவியது.

இதுபோல போராட்டங்கள் பிற நாடுகளில் நடைபெற்றது. உரிமைக்கான போராட்டம் மூலம் வெளிநாடுகளில் உழைப்பாளர்கள் வெற்றி பெற்றது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பெரும் நம்பிக்கையை தந்தது. 

இந்தியாவில் முதல் முறையாக நமது தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை-யில் தான் மே தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் சிங்காரவேலர். இவர் மற்றும் இவர் போன்றவர்களின் முயற்சியால் மே 1, 1923ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக மே தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது.

நமது நாட்டிலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் அதிக உழைப்பை அதிகம் வாங்கிக்கொண்டு ஊதியத்தை குறைத்து கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது. தினமும் 12-14 மணி நேரம் உழைக்கும் சூழல் நிலவியது.  இதற்கு எதிராக தொடர்ச்சியாக தொழில் சங்கங்கள் போராடின. அவர்களின் போராட்டத்தால், தியாகத்தால் Factories Act, 1948 எனும் சட்டத்தில் 8 மணி நேரம் மட்டுமே தினமும் வேலை என்பது உறுதி செய்யப்பட்டது. 

இனி என்ன?

இன்று கூட இந்தியாவில் தினமும் 10-12 மணி நேரம் ஊழியர்கள் உழைக்க வேண்டும் என எல் &டி நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியன், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி போன்றோர் பேசுவதை நமது நாடு பார்த்து வருகிறது...  இவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.

இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்களும் ஒரு உழைப்பாளி/ஊழியராக இருந்தால், உங்க சக ஊழியர்களுக்கு அவர்கள் உரிமை ரீதியாக இடையூறுகளை சந்திக்கும் போது, ஒரு தோழராக, தோழியாக தோல் கொடுங்கள். ஒருவேளை நீங்கள் உயர் அதிகாரியாக அல்லது முதலாளியாக இருந்தால், உங்கள் ஊழியர்களின் உரிமைகளை காக்கும் பண்புடையவராக இருங்கள்.

அதே போல, அனைவருமே உங்கள் குழந்தைகளிடம், எந்த தொழில் செய்தாலும், உழைப்பவர்களுக்கு ஊதியம் ஒன்றுதான் வேறே தவிர மரியாதை என்பது ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்.

உழைக்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.