தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

அதில், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி, திருவிழாக்கள் போன்றவற்றில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள், குடிநீர், ஜூஸ் போன்றவற்றின் சுகாதார தன்மையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பிட வசதிகள் மற்றும் பாதுகாப்பான சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது தேசிய அளவில் நிலை என்ன?

தற்போதைய நிலையில் இந்தியாவில் 1010 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752 பேருக்கு அண்மையில் தொற்று ஏற்பட்டுள்ளது. 

கேரளாவில் தான் 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்து டெல்லி, மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 1 வாரத்தில் 3 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற வாரம் 35 பேர் பாதிக்கப்பட்டநிலையில் தற்போது அதனுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் தாக்கம் குறைந்து உள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் புது மாதிரிகளாக NB.1.8.1 மற்றும் LF.7 எனும் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. உலக சுகாதார மையம் இதை தீவிரமாக கவனித்த வருகிறது. குறிப்பாக NB.1.8.1 வகை பற்றி அதன் அறிக்கையில், Low Global Risk என குறிப்பிட்டுள்ளது. அதாவது இதனால் எந்த உலகளாவிய பெரும் பாதிப்பும் இருக்கா சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த 2 வகை கொரோனா மாதிரிகள் மேலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை அதேசமயம் முன்னெச்சரிக்கை அவசியம். அரசு வெளியிடும் தகவல்களை, வழிகாட்டுதல்களை பின்பற்றினால் போதும்.