ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆடிஸ் வீதி பகுதியில் கட்டப்பட்டு, 5.1.2024 அன்று முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம் வார்டு 83ல் அமைந்துள்ள இந்த நூலகத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முக்கியமாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் பயன்பெறும் வகையில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் உள்ளன. மேலும் செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளை வாசிக்க தனி இடமும் உண்டு. அதேபோல இங்கு 16 கணினி உள்பட டிஜிட்டல் நூலகமும் உள்ளது. 

இரண்டு தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில், 180 பேர் பயன்படுத்திக்கொள்ள இடவசதி உள்ளது. இங்கு போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கான தலைப்புகளில் மட்டும் 4000 புத்தகங்கள் உள்ளது. இதுவரை குறைந்தது 14 பேர் இந்த மையத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிகண்டுள்ளனர். கோவை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து இங்கு மாணவர்கள்  டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி., வங்கி தேர்வுகள், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்கு தயாராக தினமும் 250க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வருகை புரிகின்றனர்.

இங்கு அவர்கள் அனைவருக்கும் இடம் எளிதில் கிடைப்பதில்லை என்பதால் பலரும் பொறுமையாக காத்து நின்றே இதை பயன்படுத்த வேண்டி உள்ளது என்பதால், இதை மாநகராட்சி விரிவாக்கம் செய்யவேண்டும், கூடுதல் தளங்கள் அமைக்க வேண்டும் என வேண்டுக்கோள் உள்ளது. தற்போது அந்த வேண்டுகோள் வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  தற்போதைக்கு இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை விரிவாக்கம் செய்ய  திட்டம் இல்லை என மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதேசமயம், இந்த தேவையை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில், முதல்வர் படிப்பகங்கள் வர உள்ளன. இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது. விரைவில் இதில் முன்னேற்றங்கள் ஏற்படும் என தெரியவந்துள்ளது.