அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்திற்கு 1000+ மரங்களை வெட்ட அனுமதி ... பதிலாக 4000+ மரங்களை நட உத்தரவு
- by CC Web Desk
- Jun 27,2025
கோவை அவிநாசி - மேட்டுப்பாளையம் வழியே உள்ள 38 கிலோமீட்டர் 2 வழிசாலையை தினமும் 22,000 வாகனங்கள் செல்கின்றன. விஷேச நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களில் இதில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்.
இந்த 7 மீட்டர் அகலம் கொண்ட சாலையில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முயலும்போது விபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாலும் இதை விரிவாக்கம் செய்யவேண்டியது அவசியம் ஆகிறது. இந்த நிலையில், 'முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்' கீழ் இந்த சாலையை 4 வழி நெடுஞ்சாலையாக தரமுயர்த்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலை துறை எடுத்துவருகிறது.
38 கிலோமீட்டர் கொண்ட இந்த சாலையில், 13 கிலோமீட்டர் திருப்பூர் மாவட்டத்திலும், 25 கிலோமீட்டர் கோவை மாவட்டத்திலும் உள்ளது. இதற்காக தமிழக அரசால் ஏற்கனவே ரூ. 238 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக அவிநாசி - அன்னூர் வழியே வரக்கூடிய பகுதிகளில் சுமார் 470 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து கோவை மேட்டுப்பாளையம் - அன்னூர் வரை இருக்கக்கூடிய 1600 மரங்கள் இந்த சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதில் 1342 மரங்கள் அகற்ற திட்டமிட்டும், மீதம் உள்ள 262 மரங்களை வேறு இடத்தில் மறு நடவு செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது.
சாலை விரிவாக திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டது பற்றி நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து அதுகுறித்து சமீபத்தில் விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது, இந்த திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை சமர்ப்பிக்கவும், மரங்களை வெட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட பசுமை குழுவின் அனுமதி பெற்றதா என கேள்வியும் எழுப்பியது.
இந்த நிலையில், நெடுஞ்சாலை துறை இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் மரங்களை அகற்ற மாவட்ட பசுமை குழுவின் அனுமதி பெறப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யா நாராயணா மற்றும் நிபுணர்-உறுப்பினர் சத்தியகோபால், இந்த திட்டத்தின் கீழ் 7 மீட்டர் அகலம் கொண்ட 2 வழிச்சாலை, 16.2 மீட்டர் அகல நான்கு வழிச்சாலை ஆக மாற்றப்படுவதனால், போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் எனவும், இந்த விரிவாகத்தால் இப்பகுதியின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது என்பது நெடுஞ்சாலை துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் தெரியவருவதாக கூறினர்.
எனவே திட்டத்திற்கு தேவைப்படும் மீதி மரங்களை வெட்ட அனுமதி வழங்கிய தீர்ப்பாயம் அதே சமயம், இதுபோன்ற வளர்ச்சி என்பது சுற்றுசூழலின் சமநிலையை சீர்படுத்த முடியாத படி அமைந்து விடக்கூடாது என குறிப்பிட்டது. இந்த திட்டத்திற்காக வெட்டப்பட்ட 470 மரங்களுக்கு பதில் 4770 மரங்கள் நடப்பட வேண்டும் எனவும், அதை 2 பருவ காலத்திற்குள் செய்யவும், பின்னர் குறைந்தது 5 ஆண்டுகளுக்கோ அல்லது அவை போதிய அளவு வளரும் வரை வேலி அமைத்து, நீர் பாய்ச்சி பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெட்டப்பட்ட மரங்கள், நடவு செய்யப்பட்ட மரங்கள், அவற்றின் தற்போதைய நிலை, அனைத்தும் புவிசார் குறியீடு உடன் நெடுஞ்சாலை துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் எனவும் தேர்ந்தெடுக்கப்படும் மரங்கள் உள்நாட்டு வகை மரங்களாக இருக்க முன்னுரிமை அறிவுறுத்தப்பட்டு உள்ளது.