கோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் யானை நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது.

இந்த நிலையில் யானையின் பிரேதப் பரிசோதனையில் அதன் வயிற்றில் 15 மாத கருவுடன், பிளாஸ்டிக் கழிவுகளும் புழுக்களும் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வனத்துறையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் கருவுற்றிருந்த யானைக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் போனது வனத்துறையினரின் அலட்சியத்தையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் யானையின் வயிற்றில் இருந்திருப்பது, வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவதையும், வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது என வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.