கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்தி குமார் பாடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (24.05.2025) முதல் 27.05.2025 வரையிலான ஆகிய நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, அவிநாசி மேம்பாலம் அருகில் மற்றும் காளீஸ்வரா மில் சாலை ஆகிய பகுதிகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் கூடுதல் மின் மோட்டார்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை அவர் மாவட்ட கலெக்டர் பவன் குமார்; மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, ஆர்.எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (Integrated Command & Control Centre) செயல்பாடுகளையும், தொடர்ந்து, கிழக்கு மண்டலம் அவிநாசி சாலை ஃபன்மால் அருகில் உள்ள கால்வாய் மாநகராட்சியின் சார்பில் தூர்வாரப்பட்டு வருவதையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.