இந்தியாவை கலக்கும் இன்ஃப்ளுயன்சர் ராதிகா சுப்பிரமணியம் ... ஊரே இந்த தமிழ் பேசும் பெண்ணை கவனிக்க காரணம் என்ன ?
- by David
- Jun 13,2025
இன்று இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் 'இன்ஃப்ளுயன்சர்'களுக்கு பஞ்சமில்லை. உணவு, சினிமா, ஃபேஷன், கலாச்சாரம், காமெடி என எல்லா துறைக்கும் இன்ஃப்ளுயன்சர்கள் உள்ளனர்.
ஆனால் வழக்கமான இன்ஃப்ளுயன்சர்களை விட பெங்களூரை சேர்ந்த ராதிகா சுப்பிரமணியம் கொஞ்சம் தனித்துவமானவராக அறியப்படுகிறார். இவருக்கு 3000+ பின்தொடர்வோர்கள் தான் உள்ளனர் என்றாலும் இவரை பற்றி தான் ஊரெல்லாம் பேச்சு.
அப்படி என்ன சிறப்பு இந்த தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசும் மாடர்ன் பெண்ணிடம் என்றால் ... இவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் உழைத்து கொண்டு இருந்து, அதன் பின் ஒரு கட்டத்தில் தன் உள்ளம் காட்டும் பாதையை நோக்கி பயணிக்கவேண்டும் என முடிவு செய்து ஊர் ஊராக சுற்றி வருகிறார் என்பது தானே என பலரும் நினைக்கலாம்.. ஆனால் அதுதான் இல்லை... இவர் செயற்கை நுண்ணறிவு (எ.ஐ) மூலம் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் சுற்றுலா இன்ஃப்ளுயன்சர் என்பது தான் இவரின் தனி சிறப்பு.
இவரை இந்தியாவை சேர்ந்த கலெக்டிவ் ஆர்டிஸ்ட்ஸ் நெட்ஒர்க் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ஒரு செயற்கையான வாழ்க்கை கதையை அவர்கள் வழங்கி உள்ளனர். அதில் இவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் உழைத்து கொண்டு இருந்து, அதன் பின் ஒரு கட்டத்தில் தன் உள்ளம் காட்டும் பாதையை நோக்கி பயணிக்கவேண்டும் என முடிவு செய்து ஊர் ஊராக சுற்றி வரும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டு உள்ளார்.
இவர் இந்தியாவில் உள்ள பல சிறப்பான சுற்றுலா பகுதிகளுக்கு தனியே சென்று அங்கு உள்ள இடங்களை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யும் படி அவரின் பக்கத்தை வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு இடத்தின் அழகு, அங்குள்ள உணவு, கலாச்சாரம் என எல்லா சிறப்புகளையும் இணையவாசிகளுக்கு காட்சிப்படுத்துவதே இவரின் 365/24 பணியாக உள்ளது.
அயோத்தியில் துவங்கிய இவரின் முதல் பயணம், அதை அடுத்து ராஜஸ்தான், கோவா, மேகாலயா ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளது. இவரின் பயணம் தொடர்கிறது.