கோவை மருதமலை அடிவாரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

கடந்த சனிக்கிழமை அன்று மருதமலை அடிவாரத்தில் வெகு நேரமாக ஒரு தாய் யானை அசையாமல் அதன் குட்டியுடன் நின்றுகொண்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு நேரில் சென்றனர்.

அப்போது அந்த யானை உடல்நல குறைவால் மயங்கி விழுந்ததும் அதன் அருகே அதன் குட்டி நிற்பதும் கண்டு, வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை வழங்க முடிவெடுத்தனர். 25 வயது மதிக்கத்தக்க அந்த யானைக்கு சிகிச்சை வழங்க ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டனர். யானைக்கு உணவும் குடிநீரும் வழங்கப்பட்டது.

எழுந்து நிற்கமுடியாத நிலையில் இருந்த யானை ஞாயிறு அன்று உடல்நலம் சற்று தேறியது. விரைவில் குணமாகி வனத்திற்குள் குட்டியுடன் செல்லும் என எதிர்பார்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.