கனமழையால் கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் இயல்பு பணிகள் கடும் பாதிப்பு
- by CC Web Desk
- May 26,2025
கோவை மாநகர், மேட்டுப்பாளையம் சாலையில் 112 கதைகளுடன் கடந்த 15 வருடங்களாக மொத்தவிலை காய்கறி அங்காடியான எம்.ஜி.ஆர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
எப்போதெல்லாம் மேட்டுப்பாளையம் சாலை பகுதிகளில் கனமழை பெய்கிறது அப்போதெல்லாம் இந்த மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி சேரும் சகதியும் ஆகிவிடும். இதனால் அங்கு வரும் காய்கறி வாகனங்கள் மழை காலங்களில் மிகவும் சிரமம் அடைந்துவருகின்றன.
இதற்கு தீர்வாக மார்க்கெட்டை புதுப்பிக்கும் நடவடிக்கை (மார்க்கெட் முழுவதும் கான்க்ரீட் தளம் அமைக்கும் பணி) 2 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதை வேகப்படுத்தி விரைவாக முடித்துக்கொடுக்க வேண்டும் என மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழல் உள்ளதால் இந்த மார்க்கெட் பகுதி பாதிப்புக்குளாகி வருகிறது. மார்க்கெட் வளாகத்திற்குள் சேரும், மழை நீர் தேக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறி இறக்கும் வாகனங்கள், அதை எடுத்து செல்லும் ஊழியர்கள், வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும் போது, வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து செல்வதற்கு மட்டும் பணிகள் நடப்பதாக மார்க்கெட்டை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம் அங்கு நடைபெற்றுவரும் வளாக புதுப்பிப்பு பணிகளை வேகமாக நடத்திட மார்க்கெட் செயல்பாடுகளை 3 நாட்கள் நிறுத்தினால் அதை வேகமாக முடித்திட முடியும் என மாநகராட்சி கூறியுள்ளது, ஆனால் அவ்வாறு செய்தால் வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் சிலர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. இதன் காரணமாகவும் அங்கு பணிகள் தாமதம் ஆகி உள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், தற்போது இங்குள்ள வியாபாரிகளை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி இந்த இடத்தை வேகமாக சீரமைக்க திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.