இதை செய்யாவிட்டால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை கோவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
- by David
- Jun 30,2025
கோவை மாநகரில் தினமும் உருவாகும் பல தரப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் சேரும் இடம் வெள்ளலூர் குப்பை கிடங்கு. இந்த குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக மலை போல குவிந்துள்ள குப்பைகளால் துர்நாற்றம், கொசு தொல்லை, நிலத்தடி நீர் மாசு என பல துயரங்களை அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
குப்பை கிடங்கை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இதுபற்றிய வழக்கு பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) முன்பு விசாரணையில் உள்ளது. இதன் சமீபத்திய விசாரணை ஜூன் 23ம் தேதி நடைபெற்றது.
அப்போது தீர்ப்பாயம் கோவை மாநகராட்சியை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குவிந்துள்ள பழைய குப்பைகளை (சுமார் 9.5 லட்சம் டன்) போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, 2025 இறுதிக்குள் அகற்றவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இதை செய்ய காலக்கெடு குறிப்பிடப்பட்ட செயல் திட்டத்தை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் குப்பை கிடங்கில் மாத மாதம் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தாக்கம் ...
குப்பைக்கிடங்கு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஹாலிங்கபுரம் பகுதியும் ஒன்று. காற்று வீசும் திசை சில காலமாக மாறியதால் மஹாலிங்கபுரம் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பல வருடங்களாக இந்த குப்பை கிடங்கு ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்து வரும் அப்பகுதி மக்கள் கடந்த ஞாயிறு அன்று ஒரு கூட்டம் நடத்தி, அதில் ஒரு அரசியல் தாக்கத்தை கோவையில் ஏற்படுத்தக்கூடிய அளவிலான முடிவை எடுத்துள்ளனர்.
அதாவது வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என மஹாலிங்கபுரம் பகுதி மக்கள் தீர்மானித்துள்ளனர். மேலும் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டுள்ளனர். குப்பை கிடங்கு இங்கிருந்து அகற்றப்படவில்லை என்றால் கண்டிப்பாக 2026 தேர்தலை புறக்கணிப்பது என அவர்களில் 90% பேர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இதே போன்ற முடிவுகளை குப்பை கிடங்கை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வரும் நாட்களில் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
வெள்ளலூர் குப்பை கிடங்கு விஷயத்தை இனிமேலும் சாதாரணமாக எடுத்துக்கொல்லாமல் நடவடிக்கை எடுப்பதே சிறந்தது.