ஆத்தாடி... கோவை செம்மொழி பூங்காவில் எதிர்பார்க்காத சூப்பர் வசதிகள் எல்லாம் வரப்போகுதா!
- by CC Web Desk
- Jun 30,2025
கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த திட்டப்பணி முதல் கட்டம் (45 ஏக்கர்), இரண்டாம் கட்டம் (120 ஏக்கர்) என பிரிக்கப்பட்டு, தற்போது முதல்கட்ட பணிகள் நடைபெறுகிறது.
முதல் கட்டத்தில் உள்ள 45 ஏக்கரில் 25 ஏக்கருக்கு 23 வகை தனித்துவமான தோட்டங்கள் அமைகிறது.மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.
தற்போது வெளிவந்திருக்கக்கூடிய அதிகாரபூர்வ தகவல் படி, தாவரவியல் பூங்கா மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் 78% நிறைவேறி உள்ளது எனவும், மாநாடு மையம் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் 83% நிறைவேறி உள்ளது எனவும் தெரியவருகிறது.
பூங்காவில் இடம்பெறவுள்ள வசதிகள் :
இந்த மிகப்பெரும் வளாகத்திற்கான தரை தள வாகன நிறுத்துமிடத்தில் மின்சார வாகனங்களுக்கென மின்னூட்டு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
செம்மொழி பூங்கா வளாகத்தினுள் குழந்தைகள் விளையாடுவதற்கு என 14000 சதுர அடி பரப்பளவில் பிரத்தியேகமாக விளையாட்டுத்திடல் அமைக்கப்படவுள்ளது.
42 மீட்டர் உயரம் உள்ள பிரம்மாண்ட ராட்டினம் மற்றும் 1 கிலோமீட்டர் நீளத்திற்கு பூங்கா அழகினை ரசித்திட ஏற்றவாறு ஜிப்லைனர் அமைக்கப்படவுள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பூங்காவை பற்றி எளிதாக அறியக்கூடிய வகையில் பிரத்தியேக கண் கண்ணாடிகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கண் கண்ணாடியின் மூலம் அவர்கள் தாங்களாகவே பூங்காவினை சுற்றி வந்து பூங்காவினுள் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பம்சங்களை கண் கண்ணாடியில் இணைக்கப்பட்டுள்ளன ஒலி அமைப்புகள் மூலம் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
மக்கள் எளிதாக நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக இயற்கை முறையில் நடைபாதை தரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலக தரத்தில் உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்படவுள்ளது.
செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் உள்வனமாதிரி காட்சியமைப்பு (Terrarium) 4000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.
முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வண்டிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
இந்த வளாகத்தில் நடப்படும் மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகள் வைக்கப்படும் எனவும் அந்த பெயர் பலகைகள் க்யூ.ஆர் குறியீடுகளும், பார்கோடு போன்ற தொழில்நுட்ப வசதிகளுடன் இடம்பெறும். இதன் மூலம் எளிதில் தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும்.