கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமரும் வழக்கம் உடையவரா நீங்க? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்
- by David
- Jun 30,2025
ரேஸ் கோர்ஸ் பகுதி என்பது கோவையில் உள்ள அழகான நகர பகுதிகளில் ஒன்று.
அதிக அளவில் மரங்களை கொண்ட இந்த பகுதியை சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மேலும் அழகு படுத்தி, அங்கு பொது மக்கள் நடைப்பயிற்சி செய்ய, அமர்ந்து புத்தகம் வாசிக்க, இயற்கை அழகை ரசிக்க நிறைய வசதிகள் வழங்கப்பட்டது.
இந்த வளாகத்தை சுத்தமாக வைக்க மாநகராட்சி முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனால் பல நேரங்களில் இந்த பகுதியில் பொழுதை போக்க வருபவர்களில் சிலர், தாங்கள் சாப்பிடும் உணவின் மீதங்களை அங்கேயே விட்டு செல்வதால் அந்த பகுதியின் சூழல் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து சிலரிடம் அப்பகுதியில் பேசுகையில் அவர்கள் கூறியதாவது :-
ரேஸ் கோர்ஸ் பகுதி அனைவருக்குமானது. எனவே இதை சுத்தமாக வைப்பதில் அனைவருக்கும் பங்குண்டு. இங்கு வந்து ஸ்நாக்ஸ், ஐஸ் கிரீம் போன்ற உணவுகளை சாப்பிடும் சிலர் அந்த உணவின் மீதங்களையும், பிளாஸ்டிக் கவர்களை, பேப்பர் குப்பைகளையும் இங்கேயே விட்டு செல்கின்றனர். குறிப்பாக புல், செடிகள் அதிகமிருக்கும் இடங்களில் வீசி செல்கின்றனர். தங்கள் நண்பர்களின் பிறந்த நாளுக்கு இங்கு வந்து கேக் வெட்டும் வழக்கம் சிலரிடம் உள்ளது. கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் கேக் அட்டை, பேப்பர் பிளேட் போன்றவை இங்கேயே விட்டு செல்கின்றனர்.
இதுபோன்ற செயல்களை வார இறுதி நாட்களில் அதிகம் பார்க்க முடிகிறது. இந்த பகுதியை தூய்மையானதாக வைக்கவேண்டியது நம் அனைவரின் பொறுப்பு என்ற உணர்வுடன் இங்கு வரும் எல்லோரும் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என கூறினர்.