கோவை சத்தியமங்கலம் புறவழிச்சாலை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!
- by David
- Mar 03,2025
கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்ட பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்த அரசு இதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
4 வழி பசுமை சாலையாக திட்டமிடப்பட்டுள்ள இந்த புறவழி சாலை மொத்தம் 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும். இந்த புறவழி சாலை கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் துவங்கி அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து, புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடையும். சத்தியமங்கலத்திலிருந்து தமிழக-கர்நாடக எல்லை பகுதி அருகே உள்ள ஹாசனூரில் முடிவடையும்.
சத்தியமங்கலம் புறவழிச்சாலை திட்டத்துக்கான பணிகளை விரைவில் துவங்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட பணியாக நிலங்களை கையகப்படுத்த ரூ. 640 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிலம் கையகப்படுத்தல் பணிக்கான கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் 92 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்த அரசியல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு வெளியானதிலிருந்து 21 நாட்களுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும். நேரடியாகவோ தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ உரிய ஆவணங்களுடன் கோவை ரெட் பீல்ட் - சபரி முத்து நகரில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம். அது குறித்த ஆட்சேபனை பற்றி விசாரிக்கப்படும். எனினும் மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவே இறுதியானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.