பல ஆண்டுக்கு பின் மீண்டும் துவங்கவுள்ளது கோவை தண்ணீர் பந்தல் மேம்பால பணிகள்
- by David
- Feb 22,2025
பல ஆண்டுகளாக பாதியில் நிற்கும் தண்ணீர் பந்தல் மேம்பால பணிகள் மீண்டும் துவங்கவுள்ளது. இந்த பகுதியில் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தண்ணீர் பந்தல் ரோட்டில் கட்டப்படும் இந்த பாலம் ரூ.12.45 கோடி மதிப்பீட்டில் துவங்கியது. தண்ணீர் பந்தல் ரோட்டில் 305 மீட்டர், விளாங்குறிச்சி ரோட்டில் 217 மீட்டர், ரயில்வே தண்டவாள பகுதியில் 30 மீட்டர் என மொத்தம் 552 மீட்டர் நீளத்துக்கு இரு வழிச்சாலையாக மேம்பாலம் கட்ட 2006ல் ஒப்புதல் வழங்கியது தமிழக அரசு.
இந்த திட்டத்தில் ரயில் தடத்திற்கு மேல் வரக்கூடிய பாலத்தின் பகுதிகளை தெற்கு ரயில்வே துறையின் கட்டுமான பிரிவு 2018ல் கட்டிமுடித்தது. அதன்பின்னர் மொத்தம் 18,682 சதுர அடி நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி எடுத்துவந்தபோது நில உரிமையாளர்கள் பெரும்பான்மையானோர் நிலத்தை கொடுக்க முன்வந்தனர். ஆனால் மிக மிக குறைவானோர் மட்டும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நிலம் தர மறுத்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.
தண்ணீர் பந்தல் சாலையையும் ஹோப் காலேஜ் பகுதியையும் இணைக்கக்கூடிய இந்த பாலம் குறித்த நேரத்தில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டிருந்தால் வாகன ஓட்டிகளுடன் இந்த பகுதிக்கு இடையே உள்ள கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் பலனடைந்திருக்கும்.
இந்த வழக்கு 2023ல் முடித்துவைக்கப்பட்டது. ஆனால் அன்று ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு இப்போது பாலம் கட்டமுடியாது, கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும். எனவே அரசின் அனுமதி பெற்று, நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டு இந்த ரயில்வே பாலம் மீண்டும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணிகள் விரைவில் துவங்கவுள்ளதால், இன்று தண்ணீர் பந்தல் சாலை பகுதியிலுள்ள பிரதான குடிநீர் குழாய்களை மாற்றியமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு நடத்தியுள்ளார்.