கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பிரிவு அருகே,கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினரின் வழக்கமான ரோந்து பணியின்போது, வனப்பகுதியில் ஆண் காட்டு யானைக்குட்டி ஒன்று தாயை பிரிந்த நிலையில் காணப்பட்டது.

இந்த யானைக்குட்டியினை தாய் யானையுடன் சேர்ப்பதற்காக கோவை வனக்கோட்ட வன கால்நடை மருத்துவ அலுவலர் அவர்களின் ஆலோசனையின் படி மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு,தேவையான உணவுகள் வழங்கப்பட்டது.

பின்னர் வனப்பகுதிக்குள் சுற்றி திரிந்த தாய் யானையுடனும், மற்ற யானைக்கூட்டங்களுடனும் சுமார் ஐந்து முறைக்கு மேல் சேர்த்து விடப்பட்ட நிலையில், யானைக்குட்டியை காட்டுயானைகள் ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்து வந்தது.

தாய் யானையை பிரிந்து, உணவு கிடைக்காமல் மிகவும் தளர்ந்த நிலையில், குட்டி யானை உலா வந்த நிலையில் யானைக்குட்டியின் வயதினையும், கடுமையான வெப்பநிலையையும் கருத்தில் கொண்டு தலைமை வன உயிரின காப்பாளர், உத்தரவுபடியும், தலைமை வனப் பாதுகாவலர்,மற்றும் வன அதிகாரிகள்  அறிவுரை படி இந்த யானைக்குட்டியை முதுமலை புலிகள் காப்பகம், வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது.