மாலை, இரவு நேரங்களில் கோவை மாநகரில் உள்ள தெருவிளக்குகள் தக்க நேரத்தில் எரிய துவங்கினால் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

பல இடங்களில் நேரத்திற்கு விளக்குகள் எரிகின்றன என்றாலும் சில இடங்களில் தெருவிளக்குகளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் பாக்ஸை யாரவது ஆன் செய்தால் தான் எரியும் நிலை உள்ளது.

கோவை மாநகரில் 52,000 தெரு விளக்குகளை 3,563 மின்சார கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் மாநகராட்சி இயக்கி வருகிறது. இந்த 3,563 கட்டுப்பாடு அமைப்புகளில் 3,130 அமைப்புகள் தானாக இயங்கக்கூடியவையாக உள்ளது. 433 அமைப்புகள் மட்டும் மனித செயல்பாட்டை நம்பி உள்ளது.

இவற்றையும் தானியங்கி முறைக்கு மாற்றம் திட்டத்தை மாநகராட்சி முன்னெடுக்க உள்ளது. ரூபாய் இரண்டு கோடி மதிப்பில் இதை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.