கோவையின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) மண்டலங்களாக சரவணம்பட்டி மற்றும் விளாங்குறிச்சி உள்ளன. இதில் விளாங்குறிச்சி சாலை - ஹோப்ஸ் சாலை பகுதி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது, காரணம் இங்கு தான் தமிழ்நாடு அரசு நிறுவனங்களான எல்காட், டிட்கோ-வின் டைடல் பார்க் உள்ளது. 

இதற்கு உள்ளே ஹெச்.சி.எல்., டி.சி.எஸ்., விப்ரோ., ஆக்சென்சர் என பல்வேறு பெரும் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. 13000க்கும் அதிகமானோர் பணிசெய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 60 ஏக்கர் வளாகத்தின் உள்ளே பல வசதிகள் உள்ளது. ஆனால் இதன் வெளிப்புறத்தில் சில திருத்தங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்படவேண்டும் என கோவை வாசிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

குப்பைகள்

விமான நிலையத்தில் இருந்து டைடல் பார்கிற்கு வரும் ஐ.டி. நிறுவனங்களின் தலைவர்கள், முதலீட்டாளர்கள், அரசு அதிகாரிகள் என யார் வந்தாலும், அவர்கள் டைடல் பார்க்கை நோக்கி அரசு மருத்துவ கல்லூரி வழியே உள்ள சாலை வழியாக வலது பக்கம் திரும்பி செல்ல வேண்டும். 

இந்த சாலையில் மையப்பகுதி துவங்கி டைடல் வரை செடிகள் நடப்பட்டுள்ளது. இதில் எண்ணற்ற அளவில் குப்பைகள் வீசப்படுகிறது. சிகரெட் அட்டை, பிளாஸ்டிக் பைகள் என பல குப்பைகள் அங்கு வீசப்படுகிறது. இதன் மேல் கவனம் தேவை.

மேலும், இங்குள்ள செடிகள் பலவும் சரி சமமாக இருப்பதில்லை. அவை அதிகம் வளர்ந்து.  அவை சமமாக இருக்கும் படி அதை அழகுப்படுத்தினால் அது இப்பகுதியின் தோற்றத்தை மேம்படுத்த உதவும் என்கின்றனர்.

போஸ்டர்கள்

டைடல் பார்க் அமைந்துள்ள பகுதியில் சுவரொட்டிகள் அதிகம் ஒட்டப்படுகிறது. நுழைவு பகுதிக்கு அருகேயே சில சுவரொட்டிகள் டைடல் பார்க்கின் நுழைவு பகுதிக்கு மிக நெருக்கமான பகுதிகளில் ஒட்டப்பட்டு, சரிவர அகற்றப்படாமல் உள்ளது.

 


கோவை மாநகரில் விளம்பர போஸ்டர்களை பொது இடத்தில் ஒட்ட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டும் அதை மீறி போஸ்டர்கள் ஒட்டப்படும் நிலையில் டைடல் பகுதியுமா இதை எதிர்கொள்ள வேண்டும்?

இந்த இடத்தில் உள்ள சுவர்களில் கோவையின் பெருமைகளை சொல்லும் 'சுவர் ஓவியங்கள்' தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும் படி அமைக்கப்பட்டால், டைடல் நோக்கி வரும் ஐ.டி. நிறுவனங்களின் தலைவர்கள்,வெளிநாட்டினர், கோவை மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், அந்த இடத்தின் அழகை மேம்படுத்துவதாகவும் அமையும். சி.எஸ். ஆர். திட்டங்கள் மூலம் இந்த பணியை செய்ய அழைப்பு விடுத்தால் கோவை நிறுவனங்கள் தாராளமாக முன் வருவார்கள்.

'நோ பார்க்கிங்'கில் நிற்கும்  வாகனங்கள்

கார் போன்ற வாகனங்கள் டைடல் அமைந்துள்ள சாலையில் நிறுத்த அனுமதி இல்லை என அறிவிப்புகள் இடம்பெற்றாலும் அங்கு டாக்சிகள் நிற்கத்தான் செய்கிறது.

டாக்சிகளின் தேவை அங்கு அதிகம் உள்ளதா? அல்லது டாக்சிகள் ஓரமாக நிறுத்தி வைக்க அப்பகுதி பயன்படுத்தப்படுகிறதா என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்கவேண்டும்.

முகப்பு

கோவை டைடல் பார்க் நுழைவு பகுதி சாதாரணமான ஒன்றாக உள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் டைடல் பார்க் 2010ல் திறக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக உள்ள ஒரு முக்கிய வளாகம் இது. இதற்கடுத்து தான் தமிழ் நாட்டின் பிற இடங்களில் தற்போது இப்படிப்பட்ட பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கோவையின் ஐ.டி. துறையின் ஒரு அடையாளமாக இந்த பூங்கா உள்ளது.

கொடிசியா பகுதியின் நுழைவில் ஒரு ஒற்றை விரல் 'இது கூட்டுமுயற்சியின் சாதனை' என குறிப்பிடும் அடையாள சின்னமாக வைக்கப்பட்டு இருக்கும். டைடல் பகுதியில் அதுபோல கோவையின் ஐ.டி. துறையின் வலிமையை எடுத்துரைக்க கூடிய துறை சார்ந்து ஏதேனும் ஒரு சிலையோ, அடையாள சின்னமோ ஒன்று வைத்தால் அது இப்பகுதியை மேம்படுத்தும்.

Photos : DK