கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க துவங்கியது நிபுணர் குழு ஆய்வு!
- by David
- Jun 30,2025
கோவை மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சாலை போக்குவரத்து பிரிவு நிபுணர்கள் மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து கோவை மாநகராட்சி மாநகரில் உள்ள பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்களின் இயக்கம் சுமூகமானதாக இருக்க கூட்டாய்வை துவங்கி உள்ளது.
மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது. தற்போது உள்ள சில சாலைகளில் வாகனஓட்டிகள் பயணிக்கும் போது சாலையின் அளவு, குண்டுகுழிகள் உள்ளிட்ட சில காரணங்களால் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றனர். பல நேரங்களில் பிரதான சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
இந்த சவாலை எதிர்கொள்ள கோவை மாவட்ட சாலை பாதுகாப்புகமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில், சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதன்படி மாநகரில் 15 முக்கிய சாலை சந்திப்புகளை மேம்படுத்த கோவை மாநகராட்சி திட்டமிட்டுளளது. இந்த இடங்களில் நிபுணர் குழு, மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்புகள் ஆகியவை கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, அவர்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
இந்த 15 சந்திப்புகளில் 4 இடங்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சத்தி சாலை, விளாங்குறிச்சி, துடியலூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சாலை, தடாகம் சாலை போன்ற சில இடங்களிலும் அவர் ஆய்வு நடத்தினார்.
இந்த இடங்களில் சாலைகளை மேம்படுத்தவும், தேவைப்படும் பகுதிகளில் புது கட்டமைப்புகளை வழங்கவும் பரிசீலிக்கப்படுகிறது. கூட்டு ஆய்வை மேற்கொள்ளும் சிறப்பு குழுவினர் சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையை கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.