பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொடுக்க கோவை கலெக்டரிடம் மூதாட்டி 4வது முறையாக மனு
- by CC Web Desk
- Jun 30,2025
இந்திய அரசு 2016ல் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக அறியாமல் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த கோவையை சேர்ந்த மூதாட்டி, தன்னிடம் உள்ள சுமார் 15,000 ரூபாய்க்கு இணையான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தரவேண்டும் என தங்கமணி எனும் மூதாட்டி 4வது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தது, அதை பார்த்த அனைவரிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
தங்கமணி (79) கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் கணவர் பாலகிருஷ்ணன். இவரின் மகன் செந்தில்குமார் லாரி ஓட்டுநராக இருந்தார். 2018 ஆம் ஆண்டில் மாரடைப்பால் செந்தில்குமார் உயிரிழந்தார். ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யும்போது தனது மகனின் பையில் ரூ.15,000 மதிப்புக்கு நோட்டுகள் இருந்ததை தங்கமணி பார்த்ததாக கூறுகிறார்.
2016 பண மதிப்பிழப்பு நிகழ்வு தொடர்பாக தெரியாத நிலையில் ரூபாய் நோட்டுகளை தற்போது மாற்ற முடியவில்லை என மூதாட்டி தங்கமணி கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3 முறை ஏற்கனவே மனு அளித்த போதும் அதிகாரிகள் முறையாக பதில் கூறவில்லை என மூதாட்டி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தபோது செய்தியாளர்களிடம் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியும் எடுக்கமாட்டார்கள் என இதற்கு முன்பு குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்ற போது அதிகாரிகள் கூறியதாகவும், அதனால் எந்த வங்கிக்கும் தான் நோட்டுகளை எடுத்து செல்லவில்லை எனவும் அவர் கூறினார்.
தன்னுடன் உறவினர்கள் யாரும் இல்லை எனக் கூறும் மூதாட்டி இந்த 15,000 பணத்தை மாற்றிக் கொடுத்தால் சிறிய பெட்டிக்கடை வைத்து வாழ்வாதாரம் ஈட்டிக் கொள்வேன் என கூறியுள்ளார்.
அதிகாரிகளின் அலட்சியமான பதிலால் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ள மூதாட்டி அடுத்த முறை மனு அளிக்காமல் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன் எனவும், தான் பாதிக்கப்பட்டதை போல பழைய நோட்டுகளை பிற பெண்கள் வைத்திருந்தால், இதுபோல அவர்கள் யாரும் பாதிக்க கூடாது என அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விரத்தியுடன் தெரிவித்தார்.
PC: ABHI