கோவையில் உள்ள சுற்றுலாத்தலங்களை ஒரே நாளில் காணும் விதமாக, ஒரு நாள் சுற்றுத்திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

கோவையில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று கோவையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின் ஒருபகுதியாக இன்று கோவை குற்றாலம் சென்றார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:-

கோவை குற்றாலத்தில், பொருட்களை வைக்கவும், உடை மாற்றவும் தனித்தனி அறைகளும், கழிவறைகளும் தேவை என்று கேட்டுள்ளனர்.  மேலும், சாகச விளையாட்டுகள், பைக் பார்க்கிங் வசதி, நுழைவுச் சீட்டு கொடுக்கும் இடம் புனரமைத்தல், ஓய்வு அறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளைச் செய்து கொடுப்பதற்காக, சுற்றுலாத்துறையின் சார்பில் நானும் கோவை ஆட்சியரும் இன்று ஆய்வு செய்துள்ளோம். 

சூழல் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விவகாரம் வனத்துறை சம்பந்தப்பட்டது. இதுவரையில் ரூ.9 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்.

கோவையில் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து மக்களை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் ஆலோசனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் அறை, சமையல் கூடம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஆய்வு  செய்தார்.

காலை உணவு உட்கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் உணவின் சுவை, தரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.