கோவை வடவள்ளி பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு ... சேதமடைந்த சாலை பகுதிகளை உடனே சீரமைக்க உத்தரவு
- by CC Web Desk
- Jun 30,2025
100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்க பிரிக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப்பணிகள், சாலைப்பணிகள், கட்டுமானப் பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பற்றி, கோவை மாநகராட்சி தரப்பில் மேயர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதி, கோவை மருதமலை சாலை, வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு பணி முடிவடைந்த இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளதை கண்ட ஆணையர், சேதமடைந்த சாலை பகுதிகளை உடனடியாக சீர் செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, மருதமலை சாலை பகுதியில் சாலைகளில் மைய தடுப்புகளில் படிந்துள்ள மணல் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவறுத்தினார்.
வடவள்ளி, மருதம் நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பூங்காவை முறையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து வடவள்ளி, வி.என்.நகர் பகுதியில் பொதுமக்களுக்கு சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.