கோவை மாநகரில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையங்களில் ஒன்றான, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம்.

அரசு பேருந்துகளுக்கு காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளநிலையில், தனியார் பேருந்துகளுக்கு கோவை மாநகராட்சி - மத்திய மண்டலத்தில் வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பால பகுதி அருகே சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் மற்ற அவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதை ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் தரமுயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் சீரமைப்பு மற்றும் தரமுயர்த்தல் பணிகளுக்கான பூமிபூஜை கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்தது. அதற்கு அடுத்து பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முழுவீச்சில் துவங்கின. தற்போது இந்த வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 

அண்மை தகவல்கள் படி இந்த பணிகள் இன்னும் 1.5 மாதத்தில், அதாவது ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என தெரியவருகிறது. 

இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் பொழுது அதில் 42 பஸ் பே- க்கள் இருக்கும். 300 பேருந்துகளை இங்கே எளிதில் கையாள முடியும்.