வரும் திங்கள் (21.7.25) ஒரு நாள் மட்டும் கோவை தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை கிளை தபால் நிலையங்களில் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளையும், மற்ற சேவைகளையும் பெறமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கோவை அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் வருகிற ஜூலை 22ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த மென்பொருளில் கியூ.ஆர் கோடு (QR CODE) மூலம் பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மென்பொருளை எவ்வித சிரமமும் இன்றி செயல்படுத்த வருகிற ஜூலை 21ம் தேதி (திங்கள்) 'பரிவர்த்தனை இல்லாநாளாக' அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வரும் 21ம் தேதி கோவை தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை கிளை தபால் நிலையங்களில் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை பெற இயலாது. மேலும், பதிவு தபால், விரைவு தபால், பார்சல் அனுப்புவது போன்ற சேவைகளும் இருக்காது. 

கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் துணை கிளை அஞ்சலகங்கள் மூலம் வருகிற 21ம் தேதி பொதுமக்கள் அஞ்சலக சேவைகளை பெறலாம். ஆதார் சேவைகள், அனுமதிக்கப்பட்ட அனைத்து அஞ்சலகங்களில் வழக்கம் போல் செயல்படும். இதற்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.