கோவை மாநகரில் உள்ள காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலை மைதானம் அருகே தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நவம்பர் 2024ல் நடைபெற்றது.இந்த பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் ஒரு விசாலமான வரவேற்பு அறை, அறிவியல் மையம், கோளரங்கம், விண்வெளி லிப்ட் லாபி, விண்வெளி லிப்ட், கலையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், தமிழ் புத்தகப்பிரிவு, பருவ இதழ்கள், போட்டி தேர்வுக்கான நூலகம், டிஜிட்டல் நூலகம், இன்குபேஷன் சென்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைகிறது.

2026 ஜனவரி மாதத்தில் இந்த நூலகம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே அரசின் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டு வரும் இந்த பணியை 2 மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் வந்து பார்வையிட்டு, பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறார்.
இந்த கட்டுமான பணிக்கான தடையில்லா சான்றிதழ்கள் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் பெறப்பட்டுள்ளது. மேலும் டீ.டி.சி.பி. ஒப்புதல் என அனைத்து ஒப்புதல்களும் பெற்று இந்த பணிகள் நடக்கிறது.  

இந்த நூலகத்தில்1 லட்சம் புத்தகங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொத்த திட்டத்தில் கட்டிடம் மட்டும் ரூ.250 கோடி மதிப்பில் உருவாகும், அது இல்லாமல் புத்தகம் ரூ.45 கோடிக்கு வாங்கவும், ரூ.5 கோடிக்கு அறிவியல் சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்பட கணினிகள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 200 கார்கள், 450 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வாகன நிறுத்த வசதி இதில் இடம்பெறும்.

தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த 7 மாடி கட்டிடத்தின் முதல் தளத்திற்கான ரூஃபிங் பணிகள் வரை நடந்துள்ளது எனவும் தற்போது வரை சுமார் 25% பணிகள் நிறைவடைந்து உள்ளது எனவும் தெரியவருகிறது. இன்று கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையளர் சிவகுரு பிரபாகரன், கோவை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.