ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து தங்களுக்கு நியாயாமான கூலி உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும், ஏப்ரல் 11 (வெள்ளி) முதல் இப்போது வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தால் இதுவரை ரூ.1000 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த போராட்டத்தால் உரிமையாளர்கள் 10,000 பேரும் தொழிலாளர்கள் 3 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்கு முன்னர் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காது உள்ள நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், கந்தசாமி ஆகியோர் போராடும் மக்களை நேரில் சந்தித்து, விசாரித்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களை நேரில் சந்தித்தார்.

அதற்கடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்:-

இந்த போராட்டம் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மையமாக வைத்து நடக்கிறது. விசைத்தறியாளர்கள் போராட்டத்தை 1 மாத காலமாக கண்டுகொள்ளாமல் அரசு இருந்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் போதோ அல்லது உண்ணாவிரத போராட்டம் துவங்கும் போதே இதை அரசு முடித்து வைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் அதிமுக தரப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் கொண்டுவந்தோம். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி கேட்டதற்கு 2 நாட்களில் இந்த பிரச்சனையை முடித்து தருகிறோம் என்றனர். ஆனால் அதை தாண்டி போராட்டம் இப்போதும் செல்கிறது. அரசு அலட்சிய போக்காக இருக்காமல் இந்த பிரச்சனையை முடித்து வைக்க வேண்டும். இந்த பிரச்சனை இன்று முடித்து  வைக்காவிட்டால்,  இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக தரப்பில்  தீவிரமாக பேசுவோம் என அவர் கூறினார்.

இந்நிலையில், தற்போது கோவை கலெக்டர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களுடன் அமைச்சர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.