அடுத்த 15-20 நாட்களில் கோவை தண்ணீர்பந்தல் மேம்பால பணி மீண்டும் துவங்கும்
- by David
- Jul 22,2025
பல காலமாக பாதியில் நிற்கும் தண்ணீர் பந்தல் மேம்பால பணிகள் வரக்கூடிய அடுத்த சில வாரங்களில் மீண்டும் துவங்கும் என மாநில நெடுஞ்சாலை துறையின் கோவை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.12.45 கோடி மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் முன்பு இந்த மேம்பால திட்டம் துவங்கியது. இதற்காக தண்ணீர் பந்தல் ரோட்டில் 305 மீட்டர், விளாங்குறிச்சி ரோட்டில் 217 மீட்டர், ரயில்வே தண்டவாள பகுதியில் 30 மீட்டர் என மொத்தம் 552 மீட்டர் நீளத்துக்கு இரு வழிச்சாலையாக மேம்பாலம் கட்ட 2006ல் இத்திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.
இந்த திட்டத்தில் ரயில் தடத்திற்கு மேல் வரக்கூடிய பாலத்தின் பகுதிகளை தெற்கு ரயில்வே துறையின் கட்டுமான பிரிவு 2018ல் கட்டி முடித்தது. அதன்பின்னர் மொத்தம் 18,682 சதுர அடி நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி எடுத்துவந்தபோது நில உரிமையாளர்கள் பெரும்பான்மையானோர் நிலத்தை கொடுக்க முன்வந்தனர். ஆனால் மிக மிக குறைவானோர் மட்டும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நிலம் தர மறுத்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.
தண்ணீர் பந்தல் சாலையையும் ஹோப் காலேஜ் பகுதியையும் இணைக்கக்கூடிய இந்த பாலம், சரியாக குறித்த நேரத்தில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டிருந்தால் வாகன ஓட்டிகளுடன் இந்த பகுதிக்கு இடையே உள்ள கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் பலனடைந்திருக்கும்.
இந்த வழக்கு 2023ல் முடித்துவைக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து இப்போது பாலம் கட்டமுடியாது. கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே அரசின் அனுமதி பெற்று, நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டு இந்த ரயில்வே பாலம் மீண்டும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்.2025ல் தண்ணீர் பந்தல் சாலை பகுதியிலுள்ள பிரதான குடிநீர் குழாய்களை மாற்றியமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு நடத்தினார். பாலப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அரசு முடிவு செய்து, இந்த பணிக்கான டெண்டரைகோரப்பட்டது.
இந்த நிலையில், இந்த பாலம் தொடர்பான சர்வீஸ் சாலை அமைப்பதற்கான ஆய்வு, சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு பின்னர் 15-20 நாட்களில் ஆரம்பகட்ட கட்டுமான பணிகள் துவங்கும் என நெடுஞ்சாலை துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பால வேலைகள் முடிந்ததும், விளங்குறிச்சி, தண்ணீர்பந்தல், ஹோப்ஸ், பீளமேடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து சுமூகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.